அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்
சேர்ந்த கனகசபாபதி மனோரஞ்சனாவின் பூதவுடல் சனிக்கிழமை மாலை Warden&Sheppard சந்திப்பிலுள்ள
Highland Funeral Home மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்திரளான பொதுமக்கள்
நீண்டவரிசையில் காத்து நின்று தமது இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
மனோரஞ்சனாவின் மரணத்தினால் பெரும் அதிர்ச்சியிலிருந்தும் பெரும் துயரத்திலிருந்தும் இன்னமும்
மீளமுடியாதிருக்கும் அன்னாரது குடும்பத்தினர் அழுது புலம்பிய காட்சியும் அஞ்சலி செலுத்திய மக்கள் பலரும்
கண்ணீர் விட்டு துயரத்தை வெளிப்படுத்திய காட்சியும் அனைவர் நெஞ்சங்களையும் கிழவைப்பனவாகவிருந்தன.
பொது அமைப்புக்கள் பலவற்றினாலும் குடும்ப நண்பர்கள் உறவினர்கள் என்போரினாலும் வைக்கப்பட்டிருந்த
மலர்வளையங்கள் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தினை நிரப்பியிருந்தன. பல பொது அமைப்புக்களும் தனிப்பட்டோரும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தனர்.
கடந்த நாட்களாக அன்னாரது மரணத்திற்கு முக்கியமளித்து வருகின்ற கனடாவின் முன்னணி ஊடகங்கள் பலவும் இவ் இறுதி அஞ்சலி நிகழ்வினை வீடியோ செய்ததையும் புகைப்படம் எடுத்ததையும் காணக்கூடியதாகவிருந்ததுடன் அவை பின்னர் குறிப்பிட்ட ஊடகங்களினால் ஒளிபரப்பப்பட்டும் பிரசுரிக்கப்பட்டுமிருந்தன.
ரொறன்ரோ போக்குவரத்துச் சபை தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், விபத்து நிகழ்ந்த
வட்டாரத்தின் மாநகரசபை உறுப்பினர் ஆகியோரும் அன்னாருக்கு நேரில் சமூகமளித்து இறுதி அஞ்சலியினை
தெரிவித்ததுடன் அன்னாரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறியிருந்தனர்.
அன்னாரின் குடும்ப நண்பர் திரு.கனக.சிவகுமாரன் தலைமையில் இரங்கலுரைகள் பல அமைப்புக்களின்
பிரதிநிதிகளாலும் குடும்ப உறுப்பினர்களாலும் நிகழ்த்தப்பட்டிருந்தன. கனடா இந்து சமயப் பேரவையின்
செயலாளர் திரு.சிவ.முத்துலிங்கம், தமிழ் இசைக் கலா மன்றத்தின் இதழாசிரியர் சட்டத்தரணி கனக.மனோகரன்,
கனடா-காரை கலாச்சார மன்ற உப-தலைவர் திரு.ச.தவராசா, கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன், குடும்ப நண்பர் திரு.ரஞ்சன்
கணபதிப்பிள்ளை ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தியிருந்தனர்.
அன்னாரின் சகோதரரின் பிள்ளைகளான திருமதி.துஷ்யந்தி துஷ்யந்தன், ரிஷி கனகராசா, வைகுந்தன் தர்மராசா மற்றும் உறவினரின் மகனான அமுதீசர் சச்சிதானந்தம் ஆகியோர் ரஞ்சனா தம்மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்து மகிழ்ந்திருந்த காலங்களை நினைவுகூர்ந்து தமது உணர்வுகளை பகிர்ந்திருந்தனர். அன்னாரின் இளைய
சகோதரர் திரு.பஞ்சலிங்கம் நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் ஈமக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடலை தாங்கிய பேழை
மலர்சாலையிலிருந்து உறவினர்களால் எடுத்துவரப்பட்டபோது மலர்ச்சாலை முன்றலில் பாதையின் இருமருங்கிலும் அணிவகுத்து நின்ற மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்;. மனோரஞ்சனாவின் பூதவுடலை தாங்கிய பேழை ஊர்தியில் ஏற்றப்பட்டு பெருமளவான பொதுமக்களது வாகனங்கள் இவ்வூர்தியை பின்தொடர அன்னாரது இறுதி ஊர்வலம் தகனம் செய்யப்படும் இடமாகிய Elgin Mills மயானத்தை நோக்கி ஆரம்பித்தது. ஓம் சிவாய நம ஓம் நமசிவாய என்கின்ற மந்திரத்தை அனைவரும் உச்சரித்தவண்ணம் இருக்க அன்னாரது கணவர் கனகசபாபதி தீ மூட்டியதைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது.
